தமிழக காவல்துறையில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்விற்குத் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் வகையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த 2019 மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து, தற்போது, காவல் துறையில் பணியாற்றிக் கொண்டே இந்தத் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு 2020 ஜனவரி 11 ஆம் தேதியும், காவல் பணியில் இல்லாமல் பொதுப் பிரிவில் விண்ணப்பித்தவர்களுக்கு 2020 ஜனவரி 12-ஆம் தேதியும் எழுத்துத் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டது.
இதற்காக, காவல் பணியில் இருந்து கொண்டு இத்தேர்வில் பங்கேற்க 17,561 பேரும், பொதுப் பிரிவில் 1,42,448 பேரும் எழுத்து தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு மாநிலம் முழுவதும் 32 இடங்களில் தேர்வு எழுதுவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் தகுதி பெற்றவர்களுக்கு, தேர்வுக் கூட நுழைவுச்சீட்டை தேர்வு வாரியத்தின் http://www.tnusrbonline.org/ என்னும் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், தங்களுடைய பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.