தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகைப் பிரிவு) பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் பணியில் விரல் ரேகைப் பணியிடங்களுக்கான காலியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்தேர்விற்குக் கடந்த செப்டம்பர் 28ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அக்டோபர் 13ம் தேதி வரையிலும் கால நீட்டிப்பு செய்யப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, இந்தப் பணிக்கு 40 ஆயிரத்து, 236 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றுள், பொதுப்பிரிவில் 34 ஆயிரத்து 933 பேரும், காவல் துறையை சேர்ந்த 2,608 பேரும் எழுத்து தேர்விற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்டு 8 மையங்களில் எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. காவல் துறையை சேர்ந்தோருக்கு 22ம் தேதியன்றும், பொதுப் பிரிவினருக்கு,23ம் தேதியன்றும் தேர்வு நடத்தப்பட உள்ளது. தகுதியுடையோர் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் தங்களுக்கான பதிவெண்ணை இட்டு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.