ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், அவகாசத்தை ஏப்ரல் 12ம் தேதி வரையில் நீட்டித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் டெட் (தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் வெளியிட்டது.
இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் www.trb.tn.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலே குறிப்பிட்டதைப் போல ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 12ம் தேதி வரையில் நீட்டித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேர்வு வாரியத்திற்கு உரிய இணையதளம் சரிவர வேலை செய்யாததால் விண்ணப்பிக்க முடியவில்லை என ஏராளமான தேர்வர்கள் புகார் தெரிவித்திருந்தனர். மேலும், விண்ணப்பித்த பிறகு மின்னஞ்சலுக்கு வரும் உறுதித் தகவலிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளதாகத் தேர்வு வாரியம் தரப்பில் கூறப்படுகிறது.