தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன உதவி இயக்குநர், உதவி கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு அரசுத் துறைகளுக்கான தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு தொழில் வணிக ஆணையரகத்தில் காலியாக உள்ள உதவி இயக்குநர், உதவி கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான தேர்வு அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 9 முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரையில் பெறப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, உதவி இயக்குநர் (டெக்னிக்கல்), உதவி கண்காணிப்பாளர் (கெமிக்கல் பிரிவு) பணியிடங்களுக்கான தேர்வுகள் 2020 ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மேற்கண்ட டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 9.12.2019 நாளிட்ட அறிவிக்கை எண். 34/2019 இல் 25.4.2020 மற்றும் 26.4.2020 ஆகிய நாட்களில் நடைபெறுவதாக அறிவித்திருந்த, தமிழ்நாடு தொழிற்சாலைப் பணிகளில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குநர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வானது, கொரோனா வைரஸ் பரவலால் கடைப்பிடிக்க வேண்டிய சமூக விலகல் காரணமாகவும் தற்போது நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலை காரணமாகவும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும், இத்தேர்வுகள் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.' என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












