புள்ளியியல் ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்று முடிந்த எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி சார்பில் சமீபத்தில் கட்டிட வடிவமைப்பு உதவியாளர், திட்டப் பிரிவு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு காலியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான உத்தேச விடைகள் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) வெள்ளிக்கிழமை (டிசம்பர் 28) வெளியிடப்படவுள்ளது.
இந்த உத்தேச விடைகளில் ஏதேனும் மாறுபாடுகள் இருந்தால், விண்ணப்பதாரர்கள் அதனை தேர்வாணையத்துக்குத் தெரிவித்து சரியான விடைகளைக் கோர முடியும். வினாத்தாள் குறித்த கோரிக்கைகள் இணைய வழியில் மட்டுமே பெறப்படும். தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வுக்குரிய உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளைக் கோர முடியும்.
தேர்வர்கள் எந்த வரிசை கேள்வித்தாளை பயன்படுத்தி விடையளித்தாலும், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி மட்டுமே தேர்வர்கள் உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளைக் கோர முடியும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண், விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். பதிவு எண், விண்ணப்ப எண் ஆகிய இரண்டும் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் வழங்கப்பட்டிருக்கும்.
தேர்வர்கள் தேர்வு எழுதிய பாடத்தினை தேர்வு செய்து, பின்னர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி வினா எண்ணை தேர்வு செய்தால் அதற்கான கேள்வி மற்றும் சரியான விடைக்குறிப்பு திரையில் தோன்றும்.
விடைக்குறிப்பின் விடைகளில் மாறுபட்ட கருத்து இருப்பின் அதன் கீழே வரும் சரியான விடை அல்லது விடைகளை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அதன் கீழே இருக்கும் குறிப்புப் பிரிவில் தேர்வர்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்யலாம். அதனைத் தொடர்ந்து தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்தப் புத்தகத்தில் உள்ளது, அதன் ஆசிரியர், பதிப்பு வருடம், பதிப்பாளர், பக்க எண் ஆகிய தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
ஒரு விண்ணப்பதாரர் எத்தனை விடைகளுக்கு வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்கலாம். கையால் எழுதப்பட்ட குறிப்புகள் விடைக்கான ஆதாரமாக கருதப்பட மாட்டாது. தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் பெறப்படும் கோரிக்கைகள் எந்தக் காரணத்தை ஒட்டியும் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது என அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.