தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்காக குரூப் 4 தேர்வு நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
தற்போது இத்தேர்வில் பங்கேற்றவர்களுக்கான சான்றிதழை பதிவேற்றம் செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்தர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்காக குரூப் 4 தேர்வு நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்வில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 12-ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.
விரைவில் வெளியான தேர்வு முடிவுகள்
டிஎன்பிஎஸ்சி தேர்வுமுடிவுகள் அனைத்தும் வழக்கமாகத் தேர்வு முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு தான் வெளியிடப்படும். ஆனால், குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவாக அதாவது 72 நாட்களிலேயே வெளியிடப்பட்டது.
சான்றிதழ் சரிபார்ப்பு
இதனைத் தொடர்ந்து, தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 27 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 18- ஆம் தேதிக்குள் சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை
தற்போது, அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் 1:3 என்ற விகிதத்தில் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்விச்சான்றிதழ் அனைத்தையும் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடைசி தேதி
இத்தேர்வு குறித்த அறிவிப்பில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடர்பாக செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இதுவரையில், சுமார் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர். மீதம் உள்ளவர்களும் தங்களுடைய சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய டிசம்பர் 18 ஆம் தேதி வரையில் அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது.
கவணமாக பதிவேற்றவும்
இப்பணிக்காக ஏற்கனவே சான்றிதழ் பதிவேற்றம் செய்தவர்கள் மீண்டும் ஒரு முறை அனைத்து சான்றிதழ்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இதில், ஏதேனும் ஓர் சான்றிதழ் தவறுதலாகவோ, தொழில்நுட்ப கோளாறு காரணமாகவோ பதிவேற்றம் ஆகாமல் இருந்தால் அதனை மீண்டும் பதிவேற்றம் செய்ய முடியும்.
ஆன்லைனில் சான்றிதழ் பதிவேற்றம் செய்வோர் கவணத்திற்கு
தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (www.tnpsc.gov.in) சென்று தங்களுடைய சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம். நிரந்தர பதிவு எண் பயன்படுத்தி டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் உள்நுழைய வேண்டும். பின்பு கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி, சான்றிதழ்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக ஸ்கேன் செய்து, அவைகளைப் பதிவேற்றம் செய்யவும்.
இப்படியும் சான்றிதழைப் பதிவேற்றலாம்
ஆன்லைன் வசதி இல்லாதோர் தங்களுடைய குடியிருப்புக்கு அருகில் உள்ள அரசு இ சேவை மையங்கள் வாயிலாகவும் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம். அல்லது தனியார் கணினி மையங்கள் மூலமும் சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய முடியும்.