தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு முடிவுற்ற நிலையில் அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அது குறித்து உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பதாரர்கள் தெரிவிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4
தமிழக அரசு வேலையின் கீழ் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவர் உள்ளிட்ட குரூப் 4 பிரிவுக்குள் இடம்பெறும் பணியிடங்களில் 6 ஆயிரத்து 491 இடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த 1ம் தேதியன்று தேர்வும் நடைபெற்றது.
6 ஆயிரம் வேலைக்கு 16 லட்சம் விண்ணப்பங்கள்
முன்னதாக தேர்வு அறிவிக்கையை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட நிலையில் தேர்வு எழுத சுமார் 16 லட்சத்து 31 ஆயிரத்து 647 பேர் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 16 லட்சத்து 29 ஆயிரத்து 864 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இறுதியாக இந்தத் தேர்வை 13 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினர்.
உத்தேச விடைகள்
குரூப் 4 எழுத்துத் தேர்வு முடிவடைந்து 10 நாள்கள் நிறைவடைந்த நிலையில், அத்தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
உத்தேச விடைகள் குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தேர்வின்போது தேர்வர்களுக்கு வெவ்வேறு குறியீட்டைக் கொண்ட வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. தேர்வர்களுக்கு எந்த வகையான குறியீட்டைக் கொண்ட வினாத்தாள் அளிக்கப்பட்டு இருந்தாலும் இப்போது தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளின் வரிசை எண் படியே தங்களது மறுப்பைத் தெரிவிக்க வேண்டும்.
மூன்று கேள்விகளுக்கு பதில் இல்லை
வினாத்தாள் தொகுப்புகள் பொதுத் தமிழ், பொது ஆங்கிலம், பொது அறிவு என்று மூன்றாகப் பிரித்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பொது அறிவுப் பிரிவில் 171, 173, 174 ஆகிய மூன்று வினாக்களைத் தவிர்த்து இதர வினாக்களுக்கான விடைகளுக்கு தேர்வர்கள் தங்களது மறுப்பைத் தெரிவிக்கலாம்.
வல்லுநர்களுக்கு பரிந்துரை
பொது அறிவுத் தாளில் உள்ள மூன்று வினாக்களை வல்லுநர் குழுவுக்குப் பரிந்துரை செய்ய தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இருப்பினும் தேர்வர்கள் மூன்று வினாக்களுக்கும் அவர்களது கருத்துகளைத் தகுந்த ஆதாரத்துடன் தெரிவிக்கலாம். ஆதாரத்துடன் பெறப்படும் மறுப்புகள், கருத்துகள் ஆகியன வல்லுநர் குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டு விடைகள் இறுதி செய்யப்படும்.
மறுப்பு தெரிவிக்கும் முறை
உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துகளை வரும் 17-ஆம் தேதிக்குள் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்னும் இணையதளம் வழியாக மட்டுமே தெரிவிக்க வேண்டும். அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது. மேலும், செப்டம்பர் 17-ஆம் தேதிக்குப் பிறகு இணையதளம் வழியாகப் பெறப்படும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.
மதிப்பெண்கள்
குரூப் 4 தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றில், பொது அறிவுப் பிரிவில் 75 கேள்விகளும், திறனறிவுப் பிரிவில் 25 கேள்விகளும், பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் 100 கேள்விகளும் உள்ளன. 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வில் தகுதி பெற குறைந்தபட்சமாக 90 மதிப்பெண்களை அனைத்து வகுப்பினரும் எடுக்க வேண்டும்.
அந்த மூன்று வினாக்கள்
பொது அறிவுப் பிரிவில் மூன்று கேள்விகள் வல்லுநர் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று, இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படை கடமைகள் குறித்து விளக்குகிறது என்ற கேள்விக்கு 14, 19, 32, 51 ஏ என நான்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கேள்வி மற்றும் விடை இறுதி முடிவுக்காக வல்லுநர் குழுவுக்கு அனுப்பப்பட உள்ளது என அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
கேள்வி 2, தகவல் அறியும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள் எது என்ற கேள்விக்கு, 20 அக்டோபர் 2005, 21 அக்டோபர் 2005, 25 அக்டோபர் 2005, 12 அக்டோபர் 2005 ஆகிய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மற்றொரு கேள்வியான பொருத்துக பிரிவில், அரசியல் நிர்ணயச் சபை முதல் கூட்டம், வரைவுக் குழு உருவாக்கப்பட்ட தேதி, மாநிலங்களவையின் முதல் கூட்டத் தொடர், குடியரசு தினம் ஆகியன தெரிவிக்கப்பட்டு அவற்றுக்கு எதிரே முறையே 4 ஏப்ரல் 1957, 13 மே 1952, 29 ஆகஸ்ட் 1947, 9 டிசம்பர் 1946 ஆகிய பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கேள்விகள் அனைத்தும் வல்லுநர் குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட உள்ளன என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications












