தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறவுள்ள குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்க ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) கடைசி நாளாகும். இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 4 பிரிவின் கீழ் வருகின்றன. இந்தப் பிரிவில் உள்ள 6 ஆயிரத்து 491 காலியிடங்களை நிரப்பிடுவதற்கான தேர்வு அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த எழுத்துத் தேர்வில் பங்கெடுக்க ஜூன் 14-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் (நாளை) நிறைவடைகிறது. தேர்வுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.59 மணி வரை விண்ணப்பம் செய்யலாம். தேர்வுக் கட்டணத்தை ஜூலை 16-ஆம் தேதி வரை செலுத்தலாம்.
விண்ணப்பதாரர்கள் அவர்களின் பயனாளர் குறியீடு (USER ID) மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை மறந்து விட்டால் அதனை மிகவும் எளிமையாக மீட்டெடுக்கத் தேர்வாணைய இணைய தளத்தில் (www.tnpscexams.in) இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பயனாளர் குறியீடு, கடவுச்சொல், புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்றம், நிரந்தரப் பதிவு தொடர்பான கேள்விகளுக்கு அலுவலகப் பணி நேரத்தில் உதவி மைய எண்களை (044-25300336, 25300337, 25300338, 25300339) தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












