குரூப்-4 தேர்விற்காக சான்றிதழ் பதிவேற்றம் செய்தோர் மற்றும் செய்யாதவர்களின் விபரங்களை அறிந்து கொள்ளும் வகையில் பட்டியல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
குரூப்-4 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தரவரிசை மற்றும் இனசுழற்சி அடிப்படையில் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய விண்ணப்பதாரர்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
அவ்வாறு, சான்றிதது சரிபார்ப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட 31,425 விண்ணப்பதாரர்கள் கடந்த செப்டம்பர் 18ம் தேதி வரையிலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இணைய சேவை மையங்களில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அறிவிக்கப்பட்டனர்.
தற்போது சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ள மற்றும் செய்யாத விண்ணப்பதாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் வரும் நவம்பர் 2ம் தேதிக்குள் http://www.tnpsc.gov.in என்னும் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி உள்ளீடு செய்து தேர்வர்களின் சான்றிதழ் பதிவேற்ற நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்.
மேலும், இதுகுறித்து சந்தேகங்கள் இருப்பவர்கள் 044- 25300336 அல்லது 044- 25300337 ஆகிய தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.