தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெற்ற குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வு எழுதுவோர் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி முதல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம் என தேர்வாணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வு எழுதுவோர் வரும் 24-ஆம் தேதி முதல் தங்களது அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாவிட்டால் முதன்மைத் தேர்வில் கலந்துகொள்ளத் தேர்வாளர்களுக்கு விருப்பமில்லை எனக் கருதப்படும்.
மேலும் முதல் நிலை எழுத்துத் தேர்விற்கு தேர்வு கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் அனைவரும் முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக் கட்டணமாக ரூ.150-ஐச் செலுத்த வேண்டும். ஜனவரி 10-ஆம் தேதி கட்டணத்தைச் செலுத்த கடைசி நாளாகும். அதற்குள்ளாக சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்திய பின்னரே அவர்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய முடியும்.