டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு வரும் ஜூலை இரண்டாவது வாரத்திற்குத் தேதி மாற்றப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு மார்ச் 3ம் தேதியன்றும், முதன்மை எழுத்துத் தேர்வு மே மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும் என்றும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முதன்மை எழுத்துத் தேர்விற்கான பாடத் திட்டம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதன்மை எழுத்துத் தேர்வுக்கான பாடத் திட்டங்களை தேர்வாணையத்தின் இணையதளமான http://www.tnpsc.gov.in/-இல் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கான பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் மாற்றப்பட்டுள்ளதால் தேர்விற்காக தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கு போதிய கால அவகாசம் தரப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு முதன்மை எழுத்துத் தேர்வு ஜூலை இரண்டாம் வாரத்தில் நடத்தலாம் என முடிவு செய்துள்ளது.