டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 1 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கடைசி கட்டத் தேர்வான நேர்முகத் தேர்வு வரும் 21ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் நந்தகுமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டிஎன்பிஎஸ்சி, குரூப் 1-இல் காலியாக இருந்த 85 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 9ம் தேதியன்று வெளியிடப்பட்டது. இதில், முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற 176 பேரின் பட்டியல் கடந்த 31ம் தேதியன்று வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, முதன்மை எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வானது சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் வரும் 25-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்தான தகவல் விண்ணப்பதாரர்களுக்குக் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேர்முகத் தேர்விற்கான தகவலை டிஎன்பிஎஸ்சி-யின் www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் அவரவர்களுக்கென அறிவிக்கப்பட்ட நாளில் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்து கொள்ளாத விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது.