ஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பத் தேதியினை டிஎன்பிஎஸ்சி மாற்றி அமைத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
கஜா புயலின் தாக்கத்தில் இருந்து இன்னும் டெல்டா பகுதி மக்களும், மாணவர்களும் மீள முடியாத நிலையால் நவம்பர் 28த் தேதி தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த கால அவகாசம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், வரைவாளர் மூன்றாம் நிலை ஆகிய காலிப் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடந்த புதன்கிழமை கடைசி நாளாகவும், தோட்டக்கலை மற்றும் தோட்டக்கலை அலுவலர் உதவி இயக்குநர் காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க நவம்பர் 21-ஆம் தேதியும், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் நிலை எண் 3 மற்றும் 4 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 3ம் தேதியும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கஜா புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்களின் நலன் கருத்தில் கொள்ளப்பட்டது.
அதன்படி, ஐந்து பதவிகளிலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி டிசம்பர் 10 ஆகும். தேர்வுகளுக்கான தேர்வுக் கட்டணம் செலுத்த டிசம்பர் 12-ஆம் தேதி கடைசி நாளாகும்.
தேர்விற்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் நீட்டிக்கப்பட்ட போதிலும், தேர்வுகள் நடைபெறும் நாள்களில் மாற்றம் ஏதுமில்லை என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.