தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் மொத்தம் 726 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாடு வனத் துறையில் காலியாக உள்ள 300 வனவர், 726 வனக் காப்பாளர்கள், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் உள்ளிட்ட மொத்தம் 1178 பணியிடங்களுக்குக் கடந்த 2018 டிசம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது. ஆன்லைன் மூலம் நடைபெற்ற இந்த எழுத்துத் தேர்வில் மொத்தம் 2.10 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இந்நிலையில், வனக் காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு என எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களின் விவரங்கள் கடந்த ஜனவரி 21ம் தேதியன்று வெளியிடப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற் தகுதித் தேர்வு கடந்த ஜனவரி 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையும், பிப்ரவரி 21-ஆம் தேதியும் சென்னையில் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வின் அடிப்படையில் 726 பேர் வனக் காப்பாளர் பணியிடத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த விவரம் www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு, பணிக்கான பயிற்சி அளிக்கப்படும் என தமிழ்நாடு வனத் துறை சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.