சென்னை: தமிழகத்தில், ப்ளஸ் 2 எனப்படும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவிகளே முதலிடம் பிடித்துள்ளனர்.
தமிழை முதன்மை பாடமாக எடுத்துப் படித்த திருப்பூர் விகாஸ் வித்யா மெட்ரிக் பள்ளி மாணவி பவித்ரா, கோவை சௌடேஸ்வரி பள்ளி மாணவி நிவேதா ஆகிய இருவரும் 1200க்கு 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்கள்.
மார்ச் 5 ஆம் தேதி துவங்கிய ப்ளஸ் 2 தேர்வுகள் மார்ச் 31 ஆம் தேதி முடிவடைந்தன. மொத்தம் 8 லட்சத்து 86 ஆயிரத்து 27 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கையே அதிகம். இவர்கள் தவிர 42,963 பேர் தனித்தேர்வு எழுதி உள்ளனர்.
தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அரசு தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் சென்னையில் இன்று வெளியிட்டார்.
தேர்ச்சி விகிதம்
தமிழகத்தில் 90.6 சதவீதம் பேர் தேர்வு பெற்றுள்ளனர். தமிழகத்தில் 90.6 சதவீதம் பேர் தேர்வு பெற்றுள்ளனர். மாணவிகள் 93.4 சதவீதமும், மாணவர்கள் 87.7 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என இயக்குநர் தேவராஜன் தெரிவித்தார்.
முதலிடம் 2 மாணவிகள்
தமிழை முதன்மை பாடமாக எடுத்துப் படித்த திருப்பூர் விகாஸ் வித்யா மெட்ரிக் பள்ளி மாணவி பவித்ரா, கோவை சௌடேஸ்வரி அம்மன் பள்ளி மாணவி நிவேதா ஆகிய இருவரும் 1200க்கு 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்கள்.
2ஆம் இடம் 4 பேர்
1190 மார்க்குகள் பெற்று 2 ம் இடத்தை பிடித்த மாணவ, மாணவிகள் விவரம் வருமாறு:
ஈரோடு, ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக், மேல்நிலைப்பள்ளி மாணவன் விக்னேஸ்வரன், நாமக்கல், எஸ்கேவி மேல்நிலைப்பள்ளி, மாணவன் பிரவீன், குமாரபாளையம் எஸ் எஸ் எம் லஷ்மி அம்மாள் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவன் சரண்ராம், திருச்சி துறையூர் சவுடாம்பிகை மெட்ரிக், பெண்கள் மேல் நிலைப்பள்ளி, வித்யாவர்ஷிணி ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.
மூன்றாம் இடம்
நாமக்கல் மாவட்டம் டிரினிட்டி அகாடமி மாணவி பாரதி 1189 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
200க்கு200 மதிப்பெண்கள்
இந்த ஆண்டு கணித பாடத்தில் 9710 பேரும், வேதியியல் பாடத்தில் 1049 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 577, இயற்பியல் பாடத்தில் 124 பேரும், தாவரவியலில் 74 மாணவர்களும், விலங்கியலில் 4 மாணவர்களும், 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகள்
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும், தேசிய தகவல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணம் இன்றி, அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு விவரத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை பாட வாரியாக மதிப்பெண்களுடன், குறிப்பிட்ட இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தனித்தேர்வர்கள்
தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின், தலைமை ஆசிரியர் மூலம் பதிவிறக்கம் செய்து பெறலாம். மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் தேவைப்பட்டால், வரும் 18ம் தேதி முதல், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தங்கள் பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து, தாங்களே பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு, தேர்வுத் துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.
இணையதள முகவரி
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, வரும் 14ம் தேதி முதல், மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகல்
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு, பயின்ற பள்ளிகள் மூலமாகவே மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. நாளை ( மே 8) முதல், மே 14 வரை (ஞாயிற்றுக் கிழமை தவிர) விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே, விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும்.
கட்டணம் எவ்வளவு
விடைத்தாள் நகல் கேட்போர், அதே பாடத்துக்கு, மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது; விடைத்தாள் நகல் பெற்ற பின், அவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்படும். விடைத்தாள் நகல் பெற, மொழிப்பாடங்களுக்கு தலா 550 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு தலா 275 ரூபாய் கட்டணம். மறு கூட்டலுக்கு கட்டணம் மறுகூட்டலுக்கு மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியலுக்கு தலா 305 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு, தலா 205 ரூபாய் கட்டணம். இந்த கட்டணத்தை, விண்ணப்பிக்க உள்ள பள்ளியிலேயே ரொக்கமாக செலுத்த வேண்டும்.
இணையத்தில் பதிவிறக்கம்
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை, தேர்வர்கள் பத்திரமாக வைத்து இருக்க வேண்டும்; அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் முடியும். விடைத்தாள் நகலை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் தேதி மற்றும் இணையதள முகவரி, பின்னர் வெளியிடப்படும்.
சிறப்பு துணைத் தேர்வுகள்
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கான, சிறப்புத் துணைத் தேர்வு, ஜூன் இறுதியில் நடக்கும். இதற்கு, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்களிலும், மே 15 முதல் 20ம் தேதி வரை, தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.
தேர்வு கட்டணம்
தேர்வு எழுத விரும்பும் பாடங்களுக்கு, உரிய தேர்வுக் கட்டணத்தை செலுத்தி, தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்; இதற்கு தனி விண்ணப்பம் கிடையாது. பிளஸ் 2 தேர்வில், ஒவ்வொரு பாடத்துக்கும், 50 ரூபாய் தேர்வுக் கட்டணம்; 35 ரூபாய் இதரக் கட்டணத்தை, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ரொக்கமாக செலுத்த வேண்டும்.தேர்வுக் கட்டணம் தவிர, பதிவுக் கட்டணமாக 50 ரூபாய் செலுத்த வேண்டும். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது