தமிழகத்தில் ஜூன் 23-ஆம் தேதியன்று நடைபெறவுள்ள கணினி ஆசிரியர் தேர்விற்கான நுழைவுச்சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் கணினி ஆசிரியர்கள், இளநிலை கணினி அறிவியல் படிப்புடன் பி.எட் முடித்தவர்களும், தேசிய கல்வியியல் கவுன்சில் விதிகளின்படி 11, 12-ம் வகுப்புக்கான கணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்புடன் பி.எட்., முடித்தவர்களும் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர் என தமிழக பள்ளிக் கல்வித் துறை சமீபத்தில் அரசாணை வெளியிட்டது.
இதனடிப்படையில், 814 கணினி ஆசிரியர் காலியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கையில், இப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக கணினித் தேர்வு வரும் ஜூன் 23-ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து, இதில் பங்கேற்க தேர்வர்கள் கடந்த மார்ச் 20-ஆம் தேதி முதல், ஏப்ரல் 10-ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பித்தனர். இந்நிலையில் தற்போது இத்தேர்விற்கான நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள், தேர்விற்கான அனுமதிச் சீட்டினை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், தேர்வர்கள் நுழைவுச்சீட்டினை பிரதி எடுத்து ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை, விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதி ஆகியவற்றை தேர்வு நாளன்று எடுத்துவர வேண்டும். தேர்வு நாளான ஜூன் 23-ஆம் தேதி காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்கு கண்டிப்பாக வருகை தர வேண்டும் என தேர்வு வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












