தமிழகத்தில் முதல் முறையாக கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு இன்று (ஞாயிறு) ஆன்லைன் மூலம் நடைபெறவுள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் கணினி ஆசிரியர்கள் மற்றும் இளநிலை கணினி அறிவியல் படிப்புடன் பி.எட். முடித்தவர்களும், தேசிய கல்வியியல் முகமை விதிகளின்படி 11, 12ம் வகுப்பிற்கான கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு முதுநிலை படிப்புடன் பி.எட்., முடித்தவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, இந்த புதிய விதிகளின் அடிப்படையில் 814 கணினி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இந்தத் தேர்வில் பங்கேற்க ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 7,546 ஆண்கள், 23,287 பெண்கள் என மொத்தம் 30,833 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், கணினி ஆசிரியர் நிலை 1-க்கான (முதுநிலை நிலை) கணினி வழித்தேர்வு ஆன்லைன் மூலமாக இன்று (23.06.2019) நடைபெறவுள்ளது.
குறிப்பு:-
விண்ணப்பதாரர்கள் நுழைவுச்சீட்டினை பிரதி எடுத்து ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை, விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதி ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை இத்தேர்வு நடைபெறும்.
தேர்வு மையத்தின் கதவுகள் மூடும் நேரத்திற்குப் (காலை 9.15) பின்னர் வந்தால் தேர்வர்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுவர் எனவும், தேர்வு அனுமதிச் சீட்டினை தேர்வு மையத்திலேயே தக்கவைத்துக் கொள்ளப்படும். தேர்வர்களின் எதிர்காலத் தேவைக்கு அனுமதிச் சீட்டினைப் பிரதி எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.