தமிழக பாடத்திட்டத்திற்கு உட்பட்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில், வரலாற்றில் முதல் முறையாக மாணவிகளை விட மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 10-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 10) வெளியானது. மாணவர்கள் tnresults.nic.in, dge 1.tn.nic.in அல்லது பள்ளிகள் மூலமாக தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், செல்போன் குறுஞ்செய்தி மூலமாகவும் மாணவர்களுக்கு மதிப்பெண் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, 10-ம் வகுப்பிற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 17 முதல் 21ம் தேதி வரை பள்ளி தலைமையாசிரிடம் பெற்று கொள்ளலாம் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. அதில், மதிப்பெண்களில் குறைகள் இருந்தால் தலைமை ஆசிரியர் மூலம் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்றின் காரணமாகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண் மற்றும் அவர்களின் வருகைப்பதிவேடு உள்ளிட்டவற்றைக் கணக்கில் கொண்டு தற்போது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.