தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைந்தது. இத்தேர்விற்கான முடிவு வரும் ஏப்ரல் 29-ஆம் தேதியன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதியன்று துவங்கி 22-ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இதையடுத்து விடைத்தாள்களை மண்டலங்களுக்குப் பிரித்து அனுப்பும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.
இதனிடையே 10ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வும் மார்ச் 14-ஆம் தேதி தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 3,731 தேர்வு மையங்களில் இருந்து 9.97 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர்.
இறுதித் தேர்வான சமூகவியல் தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இத்தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் வரம் ஏப்ரல் 2-ஆவது வாரத்தில் தொடங்கப்படும். இப்பணிகள் நிறைவடைந்ததும் ஏற்கனவே திட்டமிட்டபடி ஏப்ரல் 29-ஆம் தேதியன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












