10-ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இத்தேர்வெழுதவுள்ள தனித் தேர்வர்களுக்கு நாளை (பிப்ரவரி 25) நுழைவுச் சீட்டு வெளியாகவுள்ளது. தேர்வர்கள் ஆன்லைன் வழியாக இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது குறித்து தமிழக தேர்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக மாநில பாடத்திட்டத்தின் 10ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் தனித் தேர்வர்கள் (தட்கல் உள்பட) பிப்ரவரி 25-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதனிடையே, பிப்ரவரி 26ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் நடைபெறவுள்ளது.
அறிவியல் பாட செய்முறைத் தேர்விற்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ளலாம்.
உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்தவொரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை www.dge.tn.gov.in என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.