பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகள் சானிடைசர் எனும் கிருமி நாசினியை வழங்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் அரசுப் பள்ளி, சிபிஎஸ்இ, பல்கலைக் கழகம், ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக,இ அரசுத் துறை தேர்வுகளான டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளும் கூட தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. மேலும், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசுப்பள்ளிகள், சிபிஎஸ்இ, பல்கலைக் கழக தேர்வுகள் உள்ளிட்டவை ஒத்தி வைக்கப்பட்டு மார்ச் 31ம் தேதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மாநில பாடத்திட்டத்திற்கு உட்பட்ட 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகள் சானிடைசர் எனும் கிருமி நாசினியை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பொதுத்தேர்வு நடக்கும் நாட்களில் பள்ளி வளாகம் முழுவதும், கொரோனா கிருமி பரவுதலைத் தடுக்கும் வகையில் மருந்து தெளிக்க மாவட்ட நிர்வாகம் மூலமாக உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
பொதுத்தேர்வு எழுத வரும் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சானிடைசர், அல்லது கை கழுவும் மருந்து வழங்க வேண்டும். மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பாக சானிடைசர் பயன்படுத்தி கைகளை நன்றாகச் சுத்தம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், விடுமுறை நாட்களில் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ள ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் தங்களுடைய கைகளை நன்றாகச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட சானிடைசர் உள்ளிட்ட செலவினத்தைப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிதியிலிருந்து அந்தந்த பள்ளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று (மார்ச் 20) 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெற்றது. இன்றைய தேர்வில் உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.