சென்னை: பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டியுள்ளது தமிழக அரசு.
கடந்த (2014-15) கல்வியாண்டில் பள்ளி பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த இந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் அதிக ஊக்கத் தொகை வழங்கி அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அமைச்சர்கள் பங்கேற்பு
இதற்கான விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ். அப்துல் ரகீம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் என். சுப்பிரமணியன், சமூக நலம், சத்துணவுத் துறை அமைச்சர் பி. வளர்மதி, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள், வனத் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
காசோலை, பாராட்டு
நிகழ்ச்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகைக்கான காசோலைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் அமைச்சர்கள் வழங்கினர்.
ரூ.1.68 கோடி ஊக்கத்தொகை
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழை முதல் மொழிப் பாடமாகக் கொண்டு தேர்வெழுதி மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த 26 மாணவ, மாணவிகள், மூன்றாம் இடம் பிடித்த 23 பேர், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த 51 மாணவ, மாணவிகள், இரண்டாம் இடம் பிடித்த 194 பேர், மூன்றாமிடம் பிடித்த 694 மாணவ, மாணவிகள் என மொத்தம் 988 பேருக்கு ரூ. 1 கோடியே 68 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
மேலும் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் விழாவில் வழங்கப்பட்டன.
ரூ.10.50 லட்சம் உதவி
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற 21 மாணவ, மாணவிகளுக்கு 29-6-2015 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 10.50 லட்சம் மதிப்பிலான ஊக்கத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் ஜெ. ஜெயலலிதா வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றோர் நம்பிக்கை
இதுகுறித்து அரசு உதவி பெறும் காது கேளாதோர் பள்ளியில் படித்து பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து, தமிழக அரசின் ஊக்கத் தொகையைப் பெற்ற மாணவி பிரேமலதாவின் பெற்றோர் கூறியது:
எனது மகள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்ததற்காக மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் ரூ. 30 ஆயிரத்துக்கான ஊக்கத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த ஊக்கத் தொகை, மகளின் உயர் கல்விக்கு மிகுந்த உதவிகரமாக இருக்கும். அவளைத் தொடர்ந்து படிக்க வைப்போம்.
அவளின் உயர்கல்விக்கும் தமிழக அரசு தொடர்ந்து உதவும் என்று நம்புகிறோம் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.