கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு நீடித்து வரும் நிலையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வின் இறுதிநாள் பாடத் தேர்வை எழுத தவறிய மாணவர்களுக்கு வரும் ஜூலை 27 ஆம் தேதி அந்த தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் அன்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத் தேர்வின் இறுதி பாடங்களான வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் தேர்வில் மொத்தம் 32 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை.
இதனால், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் இறுதிநாள் பாடத் தேர்வை எழுத தவறி மாணவர்களுக்கு ஜூலை 27 ஆம் தேதி அந்தத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அவரவர் பள்ளிகளிலேயே தேர்வு நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேற்குறிப்பிட்ட 12ம் வகுப்பு தேர்விற்கான புதிய நுழைவுச் சீட்டுக்களை ஜூஸை 13 முதல் 17 ஆம் தேதி வரை www.dge.tn.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது தங்களது பள்ளிகளில் நேரடியாகவும் ஹால் டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம்.
இதனிடையே, மாணவர்களின் பாதுகாப்பு கருதி கொரோனா நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது எனவும், மாணவர்கள் தேர்விற்குச் சென்று வரும் வகையில் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.