தமிழகம், புதுச்சேரியில் 11ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டம் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
11ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் கடந்த மாச்ர் 6ம் தேதி முதல் 22ம் தேதி வரையில் நடைபெற்றது. இதில், தமிழகம், புதுச்சேரியில் 7,278 பள்ளிகளில் இருந்து 8,16,618 மாணவ, மாணவியர் மற்றும் 5,032 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8,21,650 பேர் புதிய பாடத் திட்டத்தின் கீழ் முதல் பொதுத் தேர்வினை எழுதினர்.
அதேபோன்று கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாமல் இந்த ஆண்டு 12ம் வகுப்பு படித்த 84,332 பள்ளி மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களை பழைய பாடத் திட்டத்திலேயே மீண்டும் கடந்த மார்ச் மாதம் 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வின்போது தேர்வு எழுதினர்.
மேலும் கடந்த ஆண்டு நேரடித் தனித்தேர்வராக தேர்வெழுதி தேர்ச்சி பெறாத 690 தேர்வர்கள் இந்த ஆண்டு பழைய பாடத்திட்டத்திலேயே 11ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதினர்.
இந்நிலையில், 11ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள், நேரடித் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியானது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மாணவிகளே அதிகம்!
கடந்த ஆண்டு மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 91.3 சதவிகிதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 95% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவிகளில் 96.5 சதவிகிதம் பேரும், மாணவர்களில் 93.3 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகள் 90.6% மாணவ, மாணவிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 96.9% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முதலிடம்!
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டம் 11ம் வகுப்பு தேர்வில் 97.9 சதவிகித தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் 98 சதவிகித தேர்ச்சியுடன் முதலிடத்தையும், 97.6 சதவிகித தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
மதிப்பெண் சான்றிதழ் :
11ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவர்களுக்கு இணையதளம் வழியாக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். அரசுத் தேர்வுத் துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் வரை மட்டுமே இந்த மதிப்பெண் பட்டியல் செல்லுபடியாகும். மே 14-ஆம் தேதியன்று பிற்பகல் முதல் தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
தனித் தேர்வர்களுக்கு!
11ம் வகுப்பு தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களைக் கொண்டு www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மறுகூட்டலுக்கு..!
தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வு முடிவின் மதிப்பெண் மறுகூட்டல், விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மே 10, 11, 13 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.