இராமநாதபுரம் மாவட்டமானது, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.48 சதவிகிதம் தேர்ச்சிபெற்று, அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கான தேர்ச்சியில் முதன் முறையாக மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
ஏப்ரல் 29ம் தேதியன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில், ராமநாதபுரம் மாவட்டம் 98.48 சதவிகிதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 255 பள்ளிகளைச் சார்ந்த 8,240 மாணவர்கள், 8,383 மாணவியர் என 16,623 மாணாக்கர்கள் தேர்வு எழுதினர்.
இதில், தேர்வு எழுதியவர்களில் 8,081 மாணவர்களும், 8,289 மாணவியரும் என 16,370 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகித அடிப்படையில், மாணவியரின் தேர்ச்சி 98.88 சதவிகிதமாகவும், மாணவர்களின் தேர்ச்சி 98.07 சதவிகிதமாகவும் ராமநாதபுரம் மாவட்ட மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி சதவிகிதம் 98.48 சதவிகிதம் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளது.
அதுமட்டுமின்றி, இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 131 அரசு பள்ளிகளில் 94 அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வெழுதிய அரசுப் பள்ளிகளைச் சார்ந்த 5,757 மாணவ, மாணவியர்களில் 5,657 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளிகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவிகிதத்தில் 98.26 சதவிகிதம் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. மாநில அளவிலான இந்தச் சாதனையை முதன் முதலாக ராமநாதபுரம் மாவட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.