பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மார்ச் 25ம் தேதியன்று நடைபெற்ற கணிதத் தேர்வு வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 14-ஆம் தேதியன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இதில், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கணிதத் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறியதாவது :-
கடந்த ஆண்டுகள் பொதுத்தேர்வு வினாத்தாளை ஒப்பிடுகையில், இந்த வருடம் கணித வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்தது. அதனைப் பார்த்ததுமே பேரதிர்ச்சியடைந்தோம். காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் மட்டுமல்ல, கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் கூட கேட்கப்படாத வினாக்கள் தற்போது கேட்கப்பட்டுள்ளன.
ஒரு மதிப்பெண் பகுதியில் 15 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அவற்றில் 8 வினாக்கள் மிகவும் கடினம். இதர வினாக்கள் கூட ஓரளவிற்கே எளிதாக இருந்தது. 2 மதிப்பெண், 5 மதிப்பெண் மற்றும் 10 மதிப்பெண் என அனைத்துப் பிரிவுகளிலும் இடம்பெற்ற பெரும்பாலான வினாக்கள் அனைத்துமே புதிதாகவும், கடினமானதாகவும் இருந்தன.
கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய முக்கிய பாடங்களில் கணிதத்தில்தான் 100-க்கு 100 மதிப்பெண்கள் எளிதாக பெற முடியும். ஆனால் இந்த வினாத்தாளில் 75-க்கும் மேல் பெறுவதே சிரமம்தான் என வேதனை தெரிவித்தனர்.
ஆசிரியரின் கருத்து..!
முதல் முறையாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை அச்சமடையச் செய்யவும், மன ரீதியாக பாதிக்கும் வகையிலுமே இந்த வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக 50 சதசிகிதம் எளிமையாகவும், 30 சதவிகிதம் சராசரியாகவும், 20 சதவீதம் கடினமாகவும் வினாத்தாள் அமைக்கப்படும். ஆனால் இந்த முறை வினா தயாரித்தவர்கள் தங்களது திறமையை வினா வடிவமைப்பில், அதுவும் மாணவர்களிடம் காட்டியுள்ளனர் என்றனர்.


Click it and Unblock the Notifications












