சென்னை: ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வில் அதிரடி மாற்றமாக சர்ச்சைக்குரிய நுண்ணறிவு தாளில் தேர்ச்சி பெற்றாலே போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் உட்பட மத்திய அரசின் 24 வகையான நேரடி உயர் பணிகளுக்காக சிவில் சர்வீசஸ் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
முதல்நிலைத் தேர்வு மெயின் தேர்வு நேர்காணல் என 3 நிலைகளை உள்ளடக்கியது இந்த தேர்வு.
மொத்தம் 2 தாள்கள்:
முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு தாள், சி-சாட் தாள் அதாவது நுண்ணறிவுத் தாள் என்ற 2 தாள்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் தலா 200 மதிப்பெண்.
மெயின் தேர்வுக்கு தேர்ச்சி:
இந்த 2 தாள்களில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் ஒரு காலியிடத்துக்கு 13 பேர் என்ற விகிதாச்சாரத்தின்படிதான் அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
கடினமான சி-சாட் பேப்பர்:
கடந்த 2011 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்ட சி-சாட் நுண்ணறிவுத்தாள் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் மற்றும் ஆங்கிலப் புலமை மிக்க பட்டதாரிகளுக்கு எளிதாக இருப்பதாகவும், கிராமப் புற மாணவர்களுக்கு கடினமாக இருப்பதாகவும் சென்ற ஆண்டு தேசிய அளவில் குற்றச்சாட்டு எழுந்தது.
மத்திய அரசு நிபுணர் குழு:
பாதிக்கப்பட்ட மாணவர்கள் சி-சாட் தாளை நீக்க வேண்டும் என்று கூறி டெல்லியில் முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து இதுகுறித்து ஆராய மத்திய அரசு நிபுணர் குழுவை அமைத்தது.
அதிரடியான மாற்றம்:
இந்த நிலையில் இந்த ஆண்டு நடத்தப்படவுள்ள சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
தேர்ச்சி மட்டுமே போதும்:
அதன்படி தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய சி-சாட் நுண்ணறிவுத்தாளில் குறைந்த பட்சம் 33 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இந்த தாளில் விண்ணப்பதாரர்கள் எடுக்கும் மதிப்பெண் மெயின் தேர்வு செல்வதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு:
அதேபோல் மெயின் தேர்வில் மொழித் தாள்கள் தேர்ச்சியிலும் மாற்றம் செய்துள்ளனர். அதன்படி தமிழ் உள்ளிட்ட முதலாவது மொழித் தாளிலும், 2வது தாளான ஆங்கிலத்திலும் குறைந்தபட்சம் 25 சதவீத மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.
தகுதிநிலை விளக்கம்:
கடந்த ஆண்டு வரையில் தேர்ச்சிக்கு இவ்வளவு சதவீதம் என்பது நிர்ணயிக்கப்படாமல் குறிப்பிட்ட ஆண்டில் தேர்வெழுதும் மாணவர்களின் தகுதி நிலைக்கு ஏற்ப தேர்ச்சி மதிப்பெண் 40 சதவீதம், 45 சதவீதம் என்ற அள வில் நிர்ணயிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
1129 பணியிடங்கள்:
இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் பணிகளில் 1129 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கு ஜூன் 19ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.upsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.