தமிழகத்தில் கடந்த ஜூன் மற்றும் ஜூலையில் நடைபெற்ற தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டயத் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருப்பது அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வுகள் தமிழகத்தில் கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் ஜூலை 12-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான மொத்த மதிப்பெண் 100, குறைந்தபட்ச மதிப்பெண் 50 ஆகும். இதில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வெழுதினர். இத்தேர்விற்கான முடிவுகள் 2018 டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம் தேர்வர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் அரசு தேர்வுத் துறைக்கும் அனுப்பப்பட்டது. அவற்றில், குறிப்பிட்ட ஒரு சில மையங்களில் மட்டும் தேர்வு எழுதிய பல மாணவர்களுக்கு 50 மதிப்பெண்கள் அடுத்தடுத்து வழங்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதற்கும் மேலாக மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தவர்களுக்கு 50 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த விடைத்தாள்களை தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் மீண்டும் திருத்தியபோது தமிழையே ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் பிழையுடனும், தவறுதலாகவும் எழுதியிருப்பதும், பக்கத்தை நிரப்புவதற்காக கேள்விக்குத் தொடர்பில்லாத பல தகவல்களையும் எழுதி இருந்ததும் தெரியவந்தது.
இதில், விடைத்தாள்கள் திருத்தப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்ததையடுத்து, இம்மாதம் வெளியிடப்பட இருந்த தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தற்போது அறிவித்துள்ளது.