மதிப்பெண் முறைகேடுகளைத் தவிர்க்கும் நோக்கத்துடன் ஆசிரியர் தகுதித் தேர்வு தவிர்த்து பிற போட்டித் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
ஆசிரியர்தேர்வு வாரியத்தின் கீழ் ஆசிரியர் தகுதித் தேர்வு, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு, அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, உதவி தொடக்கக் கல்வி அதிகாரி தேர்வு, சிறப்பாசிரியர் தேர்வு என ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
இதில் சமீபத்தில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் தேர்வுமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிதாக போட்டித் தேர்வையும் தேர்வு வாரியம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற அரசு பாலிடெக்னிக் தேர்விலும் அதற்கு முன்பு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விலும் மதிப்பெண் குளறுபடிகள், முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் எவ்வித புகாருக்கும் இடம் தராத வகையில் தேர்வுகளை நடத்தவும், தாமதம் இன்றி தேர்வு முடிவுகளை வெளியிடவும் ஆன்லைன்வழி தேர்வுக்கு மாற ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது.
இதனைத்தொடர்ந்து, அடுத்து நடைபெறவுள்ள கணினி ஆசிரியர் தேர்வு முதல்முதலாக ஆன்லைன்வழியில் நடத்தப்படவுள்ளது. தற்போது இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.