எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் மாணவர்கள் சேர உதவும் டான்செட் நுழைவுத் தேர்வு நாளை (மார்ச் 9) நடைபெற உள்ளது. இத்தேர்வை 34,020 பேர் எழுதவுள்ளனர்.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்க்கைப் பெறுவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட் ) கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும்.
இதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேரவும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வில் (சீட்டா) தேர்ச்சி பெறுவது அவசியம். இந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான டான்செட் தேர்வு நாளையும்(மார்ச் 9), சீட்டா தேர்வு நாளை மறுதினமும் (மார்ச் 10) நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தின் 14 நகரங்களில் நடைபெற உள்ள இந்த தேர்வுகளை மொத்தம் 39,301 பேர் எழுத உள்ளனர். அதாவது, எம்பிஏ படிப்புக்கு 24,814 மாணவர்கள், எம்சிஏ படிப்புக்கு 9,206 மாணவர்கள் மற்றும் எம்டெக் உட்பட பொறியியல் படிப்புகளுக்கு 5,281 மாணவர்கள் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கூடுதல் விவரங்களை https://tancet.annauniv.edu/tancet எனும் இணையதளத்தில் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 044-22358314/22358289 என்ற தொலைபேசி எண் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications












