தமிழக அரசுப் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் இன்றுடன் (செப்டம்பர் 23) முடிவடைந்த நிலையில், நாளை முதல் 9 நாட்களுக்கு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கும் கடந்த செப்டம்பர் 12ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வந்தன. மொழி பாடங்கள், முதன்மை பாடங்கள் என அனைத்துப் பாடங்களுக்கான தேர்வும் செப்டம்பர் 12ம் தேதி முதல் 23ம் தேதி வரையில் நடைபெற்று முடிந்த நிலையில் செப்டம்பர் 24ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரையில் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தி முடிந்து அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இதனால், அக்டோபர் 3ம் தேதியும் பள்ளிகளில் காந்தி ஜெயந்திக்கான கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விடுமுறை இல்லை
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நடப்பு ஆண்டில் காலாண்டு தேர்வு விடுமுறை கிடையாது என்றும், அதற்குப் பதிலாக காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு காந்திய சிந்தனை வகுப்புகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து வழக்கம் போல் காலாண்டு தேர்வு விடுமுறை வழங்கப்படும் என்றும், விருப்பமுள்ள பள்ளிகளில் மட்டும் காந்திய சிந்தனை வகுப்புகள், காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.