தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு, 6 பாடங்களுக்குப் பதிலாக 5 பாடங்களுக்கு மட்டுமே இனி தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
- 11 மற்றும் 12- ஆம் வகுப்புகளுக்கு 600 மதிப்பெண்களுக்குப் பதில் 500 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறும்.
- 600 மதிப்பெண்கள் முறையும் அமலில் இருக்கும். மாணவர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு எழுதலாம்.
- இனி 5 பாடங்கள் அடிப்படையில் 10-ம் வகுப்பைப் போலவே 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத முடியும்.
- பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியல், கணிதப்பாடங்களை படிக்க முடியும்.
- பொறியியல் படிக்க விரும்புவோர் உயிரியல் பாடம் படிக்க தேவையில்லை.
- மருத்துவ படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் வேதியல், உயிரியல் பாடங்களைத் தேர்வு செய்து படிக்கலாம்.
- மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் கணிதம் படிக்க தேவை இல்லை.
- வணிகவியல், கணக்குப்பதிவியலில் கணினி தொழில்நுட்பப் பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவாறு 11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கு இனி வரும் காலங்களில் 500 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு நடைபெறும். இந்த நடைமுறை 2020-2021 கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும்.
தற்போது உள்ள 600 மதிப்பெண்கள் முறையும் நடைமுறையில் இருக்கும். 500 மதிப்பெண் முறையும் நடைமுறையில் இருக்கும். இரு திட்டங்களில் ஏதேனும் ஒன்றை மாணவர் தேர்வு செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.