தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் மார்ச் 1ம் தேதியன்று (நாளை) 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு துவங்கவுள்ளது. இதில், மொத்தம் 8.6 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு kமார்ச் 1ம் தேதியன்று வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 7,082 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து 107 மாணவ, மாணவிகள், பழைய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண்) 25,741 தனித்தேர்வர்கள், புதிய நடைமுறையில் (ஒரு பாடத்திற்கு 100 மதிப்பெண்கள்) 1,144 தனித் தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதவுள்ளனர்.
இத்தேர்வில், 4 லட்சத்து 60 ஆயிரத்து 6 பேர் மாணவர்கள், 4 லட்சத்து ஆயிரத்து 101 பேர் மாணவிகள் மற்றும் இரு திருநங்கைகளும் என 12ம் வகுப்புப் பொதுத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
புதிய தேர்வு மையங்கள் : சென்னை மாநகரில் 408 பள்ளிகளைச் சேர்ந்த 49 ஆயிரத்து 419 மாணவ, மாணவிகள் 158 தேர்வு மையங்களில் தேர்வெழுதுகின்றனர். அதேப் போல புதுச்சேரியில் 150 பள்ளிகளிலிருந்து 40 தேர்வு மையங்களில் மொத்தம் 15,408 பேர் தேர்வெழுதவுள்ளனர்.
12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 2,944 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் நலன் கருதி இந்த ஆண்டு மட்டும் 150 புதிய தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.