தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதிய ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் விடைத்தாள்களின் நகல்களை (மார்ச் 27) புதன்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்வு நடைபெற்றது. இதையடுத்து அந்தத் தேர்வின் விடைத்தாள்களின் ஒளிநகல் கோரி விண்ணப்பிக்க, கடந்த மார்ச் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த நாள்களில் விண்ணப்பித்த தேர்வர்கள் தற்போது விடைத்தாள்களின் ஒளிநகல்களை மார்ச் 27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரையில் scan.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு:-
விடைத்தாள்களின் ஒளிநகல்களை பெற்ற பாடங்களுக்கு மட்டும் தேர்வர்கள் விருப்பம் இருப்பின் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு scan.tndge.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத் தொகையை மார்ச் 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையிலான நாள்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாகச் செலுத்தி ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விடைத்தாளின் மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.205 கட்டணமாக செலுத்த வேண்டும். விடைத்தாளின் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.505 கட்டணமாகச் செலுத்த வேண்டும். தேர்வர் வசிக்கும் மாவட்டதிற்கு அருகிலேயே உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.