2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித் தேர்வர்கள் வரும் டிசம்பர் 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் பாடத் திட்டத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளைப் பழைய பாடத்திட்டத்தில் ஏற்கெனவே எழுதி தோ்ச்சி பெறாத மாணவா்கள், வரும் 2020 மாா்ச் மற்றும் ஜூன் பருவங்களில் நடைபெறும் பொதுத் தோ்வுகளை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம்.
கடந்த ஆண்டு நேரடித் தனித்தேர்வர்களாக 11ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள், தற்போது 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதுவதற்கும், 11ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.
இதில் விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் மீண்டும் தேர்வெழுத, சேவை மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தற்போது பயிலும் பள்ளிகளின் மூலமாகவே தேர்வெழுதுவதற்கு உரிய கட்டணத்தைச் செலுத்தலாம்.
மேலும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வை ஏற்கெனவே நேரடித் தனித் தேர்வராக எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 12ம் வகுப்பிற்கான தேர்வில் பங்கேற்கலாம்.
மேற்குறிப்பிட்ட தேர்வில் பங்கேற்க விரும்புவோர் வரும் டிசம்பா் 11 முதல் 20-ஆம் தேதி வரையில் ஆன்லைன் வழியாக www.dge.tn.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.