12ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் 19ம் தேதியன்று திட்டமிட்டபடி வெளியிடப்படும் எனவும், அதற்கு அடுத்த நாளான ஏப்ரல் 20ம் தேதியன்று மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசுத்தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துளளதாவது:-
கடந்த மார்ச் மாதம் 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து அதற்கான தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் 19ம் தேதியன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரியில் இந்த முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம்.
தனித் தேர்வர்களுக்கு..!
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவுகள் வந்தடையும். தனித்தேர்வர்கள், ஆன்லைனில் விண்ணப்பித்தபோது அளித்திருந்த செல்லிடப்பேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக வரும்.
மதிப்பெண் பட்டியல்
தேர்வு முடிவு வெளியான அடுத்த நாள், (ஏப்ரல் 20) காலை 9 மணி முதல் ஏப்ரல் 26-ஆம் தேதி வரையில் தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளி, தேர்வெழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களது மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். மேலும் வரும் 24-ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் 26-ஆம் தேதி வரையிலான நாள்களில் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகல், மறுகூட்டல் :
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விடைத்தாளின் நகல் வேண்டுமா?
விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவாக முடிவு செய்து கொண்டு, அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க முடியும்.
விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர் அதே பாடத்துக்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் :
விடைத்தாளின் நகல் பெற ஒவ்வொரு பாடத்திற்கும் தலா ரூ.275-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305-ம், பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே செலுத்த வேண்டும்.
சிறப்புத் துணைத் தேர்வுகள் எப்போது? :
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வர்கள், வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்ப தேதிகள் குறித்து விரைவில் தனியாக அறிவிப்பு வெளியிடப்படும். சிறப்புத் துணைத் தேர்வு (ஜூன் 2019) ஜூன் 6-ஆம் தேதி முதல் ஜூன் 13-ஆம் தேதி வரையிலும், 11ம் வகுப்பிற்கான சிறப்புத் துணைத்தேர்வு ஜூன் 14 முதல் ஜூன் 21 வரையிலும் நடைபெறவுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications












