கொரோனா ஊரடங்கின் காரணமாக கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், இறுதி பருவத் தேர்வுகளை நடத்த அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகள் குறித்து பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தது. இந்நிலையில், இதற்கு தீர்வு அளிக்கும் வகையில் பல்கலைக் கழகங்கள் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையின் படி, அண்ணா பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக் கழகம் உள்ளிட்ட தமிழக பல்கலைக் கழகங்கள் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஆன்லைன் வழியில் தேர்வுகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, பல்கலைக் கழகங்கள் செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதிகளை வெளியிட்டுள்ளன. அதில், அண்ணா பல்கலைக் கழகம் செப்டம்பர் 22 முதல் 29ம் தேதி வரையிலும், சென்னைப் பல்கலை செப்டம்பர் 21 முதல் 25ம் தேதி வரையிலும், மதுரை காமராஜர் பல்கலையில் செப்டம்பர் 17 முதல் 30ம் தேதி வரையிலும், பாரதியார் பல்கலையில் செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 7ம் தேதி வரையிலும், பாரதிதாசன் பல்கலையில் செப்டம்பர் 21 முதல் 25ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறவுள்ளது.