தமிழக அரசின் மூலம் வழங்கப்பட்ட நீட் பயிற்சி மையத்தில் பயின்ற ஒரு மாணவருக்குக் கூட இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வில் இடம் பெறவில்லை.
இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை நிகழாண்டு முதல் 506 -ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலவச நீட் பயிற்சி
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் படித்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில் மருத்துவப் படிப்புகளில் இடம்பிடித்தவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது என குற்றச்சாட்டுகள் உள்ளன.
பள்ளிக் கல்வித் துறை
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் நீட் பயிற்சி மையங்கள் தொடர்பாக ஓர் சுற்றறிக்கையினை அனுப்பியுள்ளார்.
இலவச பயிற்சி வகுப்புகள்
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11, 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் நீட், ஜே.இ.இ., போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்யும் வகையில் தமிழக அரசின் சார்பில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நிகழ் கல்வியாண்டில் நீட், ஜே.இ.இ., போட்டித் தேர்வுகளுக்கு அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.
கூடுதலாக எத்தனை மையங்கள்
ஏற்கனவே மாநிலத்தில் ஒன்றியத்துக்கு ஒரு மையம் என்ற வகையில் மொத்தம் 412 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 94 பயிற்சி மையங்களில் நீட் போட்டித் தேர்வுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சிக்கும் மதிப்பெண் கட்டாயம்
இந்த பயிற்சி மையத்தில் சேர 12ம் வகுப்பு மாணவர்கள் 11ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், 11ம் வகுப்பு மாணவர்கள் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட வேண்டும். இதர வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 60 சதவீத மதிப்பெண்களும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண்கள் அடிப்படையிலும், 12ம் வகுப்பில் 50 மாணவர்களும், 11ம் வகுப்பில் 20 மாணவர்களும் தேர்வு செய்யப்பட வேண்டும்.
இதர போட்டித் தேர்வுகள்
ஜே.இ.இ போன்ற போட்டித் தேர்வு ஆங்கில வழியில் மட்டுமே நடைபெறுவதால், இதற்கு ஆங்கில வழி பயிற்சி மையங்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். மேலும், இது நேரடி பயிற்சி வகுப்புகளாகவும் நடத்தப்படும். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாட ஆசிரியர்கள் பயிற்சி மையங்களில் மாணவர்களுக்குப் பயிற்சிகளை வழங்குவர். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.