வேலூர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று நடைபெறவிருந்த மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தேர்வுகள் வேறு தேதியில் நடைபெறும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தி அடுத்தகட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்பு கல்வியாண்டில் முதுநிலை பொது சுகாதார இதழியல் என்ற பட்டயப் படிப்பு பல்கலைக் கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
ஒரு ஆண்டு கால அப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை மற்றும் விண்ணப்பப் பதிவு நடைமுறைகள் செப்டம்பர் மாதத்தில் தொடங்க உள்ளன.
இதனிடையே, வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று வேலூர் மக்களவைத் தொகுதிக்குத் தேர்தல் நடைபெற உள்ளதால் அன்றைய தினத்தில் நடைபெற இருந்த மருத்துவம், பல் மருத்துவம், ஹோமியோபதி, இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இத்தேர்வுகள் ஆகஸ்ட் 6 மற்றும் 7-ஆம் தேதிகளுக்கு நடைபெறும்.
இந்த புதிய தேர்வு அட்டவணை குறித்த மேலும் விபரங்களை அறிய www.tnmgrmu.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.


Click it and Unblock the Notifications












