12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில், தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அmதன்படி, விடைத்தாளில் முகப்புத் தாள் தைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடப்பாண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதில், 12-ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் 1-இல் தொடங்கி மார்ச் 19-ஆம் தேதி வரையும், 11ம் வகுப்பிற்கான தேர்வு மார்ச் 6 முதல் 22-ஆம் தேதி வரையிலும், 10-ஆம் வகுப்பிற்கான தேர்வு மார்ச் 14 முதல் மார்ச் 29-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
பொதுத் தேர்வு தொடங்க இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் ஒவ்வொரு பள்ளியிலும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டு திருத்தணி கல்வி மாவட்டம் முழுவதும் போதிய கட்டமைப்பு வசதிகள் உள்ள 20 தேர்வு மையங்களில், பள்ளியில் படிக்கும் மாணவர்களும், 2 தேர்வு மையங்களில் தனித் தேர்வர்கள் தேர்வு எழுதவும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 12-ஆம் வகுப்பு தேர்வு மையங்களுக்கு விடைத்தாள்கள், முகப்புத் தாள்கள் வழங்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்க அந்தந்த மையப் பொறுப்பாளர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தா.ராஜேந்திரன் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பிற்கான விடைத்தாளின் முகப்புத் தாள் தைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்களை நியமிக்கும் பணியும் துவங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications












