கொரோனா நோய் தொற்றின் காரணமாக தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 1 முதல் அத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக ஏற்பட்ட கொரோனா நோய் தொற்றின் காரணமாக பல்வேறு தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. அவற்றில் 10-ம் வகுப்பு தேர்வும் அடங்கும்.
மேலும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இறுதி பாடத்தின் போதும் கொரோனா பரவல் வேகமெடுத்ததன் காரணமாக மாணவர்கள் பலர் தேர்வைப் புறக்கணித்தனர். 11ம் வகுப்பிற்கான ஒரு சில பாடத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இவற்றிற்கான மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வை நடத்துவதில் அரசு உறுதியாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பல்வேறு கட்டங்களாக ஆய்வு மேற்கொண்ட நிலையில் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை
- ஜூன் 1 - மொழிப்பாடம்
- ஜூன் 3 - ஆங்கிலம்
- ஜூன் 5 - கணிதம்
- ஜூன் 6 - விருப்ப மொழிப்பாடம்
- ஜூன் 8 - அறிவியல்
- ஜூன் 10 - சமூக அறிவியல்
- ஜூன் 12 - வொகேஷனல்