டெல்லி: அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவினை ரத்து செய்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம்.
கடந்த மாதம் மே 3ம் தேதியன்று அகில இந்திய அளவிலான மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நடந்தது. அபபோது செல்போன் மூலமாக விடைகள் கசிய விடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்தத் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி ஆர்.கே.அகர்வால் தலைமையிலான பெஞ்ச் இன்று அளித்த தீர்ப்பினபோது, தேர்வை ரத்து செய்து மறு தேர்வுக்கு உத்தரவிட்டது. மேலும், இத்தேர்வினை புதிய வினாத்தாளுடன் நான்கு வாரங்களுக்குள் மீண்டும் நடத்த வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளும் இந்த மறுதேர்வு நடைமுறைக்கு முழுவதுமாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
மறுதேர்வு நடத்துவது தேர்வின் மேலான நம்பிக்கையை சீர்குலைக்கும். எனவே மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற சிபிஎஸ்சியின் கூற்றினை மறுத்துள்ள நீதிபதிகள், இது 6.30 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் குறித்த முடிவு.. இதனைத் தள்ளிக் கொண்டே போனால் சேர்க்கை தாமதமாகும் என்று கூறி மறு தேர்வுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவை ஜூன் 5ஆம் தேதி வெளியிடுவதற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.