சென்னை: தமிழகத்தில் இன்று எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 10 மணியளவில் வெளியாகின. அரசுத் தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் முடிவை வெளியிட்டார். வழக்கம் போல மாணவிகளே அதிக தேர்ச்சி அடைந்தனர்.

மாணவ-மாணவிகள் தங்களது பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தேர்வுகள் இயக்குநரகம் ஏற்பாடு செய்துள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
இதுபோக, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கூடங்களிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 19ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கியது. 11,827 பள்ளிகளை சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ- மாணவியர் எழுதினர். அவர்களில் 5,40,505 பேர் மாணவர்கள். 5,32,186 பேர் மாணவியர். தனித்தேர்வர்களாக 50,429 பேர் தேர்வு எழுதினர். இதற்காக 3298 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

சென்னை மாவட்டத்தில் 28,124 மாணவர்களும், 29,230 மாணவியரும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். புதுச்சேரியில் 9,703, மாணவர்களும், 9856 மாணவியரும் தேர்வு எழுதினர். தமிழ் வழியில் 7,30,590 பேர் எழுதியுள்ளனர். முதன்முறையாக இந்த ஆண்டு தேர்வில் விடைத்தாளின் முகப்பில் போட்டோவுடன் கூடிய விவரங்கள் மற்றும் பாடங்களுக்கு ஏற்ப பயிற்சி ஏடுகள் இணைத்தும், மொழித்தாள்களுக்கு கோடிட்ட விடைத்தாள்களும் வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து 19 பேர் மாநிலத்தில் முதலிடம் பிடித்தனர். 125 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடத்தை பிடித்தனர். 221 பேர் 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3வது இடத்தை பிடித்து சாதனை படைத்தனர் என்பது நினைவிருக்கலாம்.
மதிப்பெண் பட்டியல்
பள்ளிகள் மூலம் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உரிய தற்காலிக மதிப்பெண் பட்டியல்கள் ஆன்லைன் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அவற்றை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து 29ம் தேதி முதல் வழங்குவார்கள். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். தனித் தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள் அந்தந்த தேர்வு மையத்தில் பெற்றுக் கொள்ளலாம். இது தவிர பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் தேவைப்பட்டால் ஜூன் 4ம் தேதி முதல் தேர்வுத் துறை இணைய தளத்தில் தங்கள் பிறந்த தேதி, பதிவு எண், ஆகியவற்றை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மறுகூட்டல்
பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் மறு கூட்டல் செய்ய விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த நாளான 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இரு தாள்கள் கொண்ட ஒவ்வொரு பாடத்துக்கும் (தமிழ், ஆங்கிலம்) ரூ.305, ஒரு தாள் கொண்ட ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை அந்தந்த பள்ளிகள் மூலம் பணமாக செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதில் உள்ள எண்ணைக் கொண்டு மறுகூட்டல் முடிவுகளை அறிய முடியும்.


Click it and Unblock the Notifications












