பிளஸ் ஒன் (11-ம் வகுப்பு) பொதுத் தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இத்தேர்வை 9.38 லட்சம் மாணவச் செல்வங்கள் எழுதுகின்றனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி, கடந்த 22-ம் தேதி நிறைவடைந்தது. இத்தேர்வை 7.25 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில் பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கியது. சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்ற இத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளில் கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. 83 மையங்களில் 46 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, தேர்வு முடிவுகள் மே 14-ம் தேதி வெளியாகும்.
இந்நிலையில், 10-ம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. பள்ளி மாணவ, மாணவிகள் 9.10 லட்சம் பேர், தனி தேர்வர்கள் 28,827 பேர், சிறை கைதிகள் 235 பேர் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக 4,107 தேர்வு மையங்களும், தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க 4,591 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு கண்காணிப்பு பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.


Click it and Unblock the Notifications












