சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்றும் ஒரு வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அரசு மற்றும் தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் பி.என்.ஒய்.எஸ். என்னும் இளங்கலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 600-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
இதில், அரசு கல்லூரியில் 60 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு 358 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 192 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நிகழாண்டு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்ப விநியோகம், கடந்த திங்கள்கிழமை (ஜூலை 1) தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் எப்போது விநியோகிக்கப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது:-
நடப்பு கல்வியாண்டில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் இன்னும் ஒரு வாரத்தில் விநியோகிக்கப்பட உள்ளன என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தனர்.