சென்னை : தங்கு தடையின்றி சீரான நீரோட்டம் போல தேர்வினை தெளிவாக மேற்கொண்டு முழு மதிப்பெண்ணைப் பெறுவதற்கான வழி முறைகளை பேராசிரியர் எஸ். இராஜேந்திரன் விளக்கியுள்ளார்.
தேர்வுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்காக அவர் அளித்துள்ள சில ஆலோசனைகள்
மாணவர்களின் புரிந்து கொள்ளும் திறனையும், புரிந்து கொண்டதை வெளிப்படுத்தும் திறனையும் பரிசோதிப்பதற்காகவே தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இயற்பியலைப் பொறுத்தவரைப் படித்துக் கொண்டே போவதைப் பார்க்கிலும் எழுதிப் பார்க்கும் பயிற்சி தேர்வில் பெரிதும் கைகொடுக்கும். தங்குதடையின்றி சீரான நீரோட்டம் போல குறுகிய காலத்திற்குள் வினாக்களுக்கு பதில் எழுதி முடிக்க எழுத்துப் பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும்.
தமிழ் நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள வினா வங்கி மற்றும் மாதிரி வினாத்தாள்களைப் பயிற்சி செய்து தயாராவது நன்மை பயக்கும்.
படங்கள், மின்சுற்றுப் படங்கள் முதலியவற்றை பென்சிலால் வரைந்து பாகங்களைக் குறித்தல் வேண்டும்.
சோதனைப் பற்றிய வினாக்கள் எனில் படம், தத்துவம், சோதனை, நிரூபணம், முடிவு என்று தலைப்புக் கொடுத்து எழுத வேண்டும்.
கேள்விகளுக்கான பதிலை விளக்கும் போது கட்டுரை வடிவில் எழுதாமல் குறிப்புகள் வடிவில் எழுத வேண்டும். ஒன்வோர்டு கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போது வெறும் அ, ஆ, இ, ஈ எனப் பதிலளிக்கக் கூடாது. அ என்று எழுதி அதற்கான பதிலையும் சேர்த்து எழுத வேண்டும்.
பள்ளிப் பாடப்புத்தகத்தில் ஒவ்வொரு பாடத்திற்கும் பின் பகுதியில் உள்ள பயிற்சி வினாக்களில் இருந்து 60% கேள்விகள் கேட்கப்படும். மேலும் பாடங்களின் உட்பகுதியில் இருந்து 40% கேள்விகள் கேட்கப்படும்.
கேள்வித்தாளில் மொத்தம் நான்கு பகுதிகள் காணப்படும். பகுதி 1ல் சரியான விடையைத் தேர்ந்து எடுக்கும் விதத்தில் 30 கேள்விகள் இருக்கும். அனைத்து கேள்விகளுக்கும் கட்டாயம் பதில் அளியுங்கள். ஒவ்வொரு கேள்விக்கும் சரியாக ஒரு நிமிடம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பகுதியில் 1,4,5,6,8 ஆகியப் பாடங்களில் இருந்து சிறு கணக்குகள் வரும்.
பகுதி 2ல் 3 மதிப்பெண் கேள்விகள் 20 கேட்கப்படும் அதில் நீங்கள் 15 கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தால் போதும். ஒரு சிலர் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்து விடுவார்கள். இதனால் தேவையில்லாமல் நேரம் வீணாகும். எனவே எத்தனை கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதனை தெளிவாக படித்து விட்டு பதில் அளியுங்கள். இதில் ஒவ்வொரு கேள்விகளுக்கும் 3 நிமிடம் எடுத்துக் கொண்டு எழுத வேண்டும். இந்தப் பகுதியில் பெரும்பாலும் விதிகள், வேறுபாடுகள், மாறிலிகள் மற்றும் அலகுகள், குறை நிறைகள், சரியீடுகள், எடுத்துக்காட்டுகள் மற்றும் காரணங்கள் சம்பந்தப்பட்ட கேள்விகள் அனைத்துப் பாடங்களிலும் இருந்து கேட்கப்படும். மேலும 2,9 ஆகிய பாடங்களிலிருந்து கணக்குகள் கேட்கப்படும்.
பகுதி 3ல் 5 மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படும். முதல் கேள்வியில் இரண்டு இயற்பியல் கணக்குகள் அமைந்திருக்கும் ஏதேனும் ஒன்றிற்குக் கட்டாயம் தீர்வு காண வேண்டும். மீதமுள்ள 11 வினாக்களில் 6 வினாக்களுக்கு மட்டும் நீங்கள் பதில் அளித்தால் போதும். ஒவ்வொரு கேள்விக்கும் 5 நிமிடம் எடுத்துக் கொண்டு எழுதுங்கள்.
பகுதி 4ல் 10 மதிப்பெண் கேள்விகள் 8 கேட்கப்படும். அதில் ஏதேனும் 4 கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு கேள்விக்கும் 15 நிமிடம் எடுத்துக் கொண்டு பதில் அளியுங்கள். இந்தப் பகுதியில் நான்கு வினாக்களை தேர்வு செய்யும் போது கூடிய மட்டும் சமன்பாடுகளைத் தருவித்தல், நிரூபணங்கள் போன்றவற்றை தெரிவு செய்தால் முழு மதிப்பெண்கள் பெறுவது உறுதி. இதில் கூறப்பட்டுள்ள படி நீங்கள் நேர மேலாண்மையைக் கைக்கொள்ளும் போது உங்களுக்கு தேர்வில் போதுமான நேரம் இருக்கும்.
இரண்டு, மூன்று மற்றும் நான்கு ஆகிய பகுதிகளுக்கு பதில் அளிக்கும் போது கூடுதல் வினாக்களுக்கு பதில் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.