சென்னை: எஸ்எஸ்எல்சி தேர்வுக்கான ஏற்பாடுகளை தேர்வுத்துறை தீவிரமாக செய்து வருகிறது. இதையடுத்து விடைத்தாளின் முகப்பு சீட்டுகள் இணைக்கும் பணி தொடங்கியது.
பிளஸ் 2 தேர்வு இன்று தொடங்கியதை அடுத்து எஸ்எஸ்எல்சி தேர்வுகள் வரும் 19ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தேர்வில் தமிழகம் புதுச்சேரியில் இருந்து 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ மாணவியர் எழுத உள்ளனர். இதற்காக தமிழகம் புதுச்சேரியில் 3298 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட எஸ்எஸ்எல்சி தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஹால்டிக்கெட் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்தபடி அனைத்து தேர்வு மையங்களுக்கும் விடைத்தாள் தயாரிக்க தேவையான வெள்ளைத் தாள் கட்டுகள் கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, விடைத்தாளின் முகப்பில் இணைக்கப்படும் மாணவர்கள் விவரங்கள் அடங்கிய பார் கோடுகள் உடன் கூடிய ரகசிய குறியீடுகள் அடங்கிய முகப்பு சீட்டுகளை தேர்வுத்துறை தயாரித்துகள்ளது. அவற்றில் 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ மாணவியரின் போட்டோக்கள் இடம் பெறுகின்றன.
இந்த முகப்பு சீட்டுகள் தற்போது அந்தந்த மாவட்டத்தில் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் வரிசை எண்கள்படி அந்தந்த தேர்வு மையங்களுக்கு அனுப்பும் பணி நடக்கிறது. இதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பெற்று விடைத்தாளில் முகப்பில் வைத்து தைத்து தேர்வு எழுது உள்ள மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
முகப்பு சீட்டுகளை விடைத்தாளுடன் வைத்து தைக்க அந்தந்த மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தையல் ஆசிரியர்களை ஈடுபடுத்தவும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த பணிகளை கண்காணிக்க பள்ளிக் கல்வித்துறையின் இணை இயக்குநர்கள் 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கேள்வித் தாள்கள் அடுத்த வாரம் அனைத்து மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications












