கொரோனா ஊரடங்கின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு தேர்வுகள், வகுப்புகள் என அனைத்து நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மாற்று வழியில் தேர்வுகளை நடத்தி முடிக்க கல்லூரிகள் முடிவு செய்து வருகின்றன.
அதன்படி, தற்போது மத்திய பல்கலைக் கழக நிர்வாகம் மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் தேர்வு நடைமுறையை வெளியிட்டுள்ளது. அப்படி என்னதான் அதில் சுவாரஸ்யமான விசயம் உள்ளது என இங்கே காணலாம் வாங்க.
தேர்வுகளை நடத்த அனுமதி
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகள் குறித்து பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தது. இந்நிலையில், இதற்குத் தீர்வு அளிக்கும் வகையில் பல்கலைக் கழகங்கள் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது.
ஆன்லைன் வழியில் மட்டுமே தேர்வு
தமிழக அரசின் அந்த அரசாணையின் படி, அண்ணா பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக் கழகம் உள்ளிட்ட தமிழக பல்கலைக் கழகங்கள் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஆன்லைன் வழியில் தேர்வுகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு விபரங்களும் வெளியீடு
அண்ணா பல்கலைக் கழகம் செப்டம்பர் 22 முதல் 29ம் தேதி வரையிலும், சென்னைப் பல்கலை செப்டம்பர் 21 முதல் 25ம் தேதி வரையிலும், மதுரை காமராஜர் பல்கலையில் செப்டம்பர் 17 முதல் 30ம் தேதி வரையிலும், பாரதியார் பல்கலையில் செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 7ம் தேதி வரையிலும், பாரதிதாசன் பல்கலையில் செப்டம்பர் 21 முதல் 25ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறவுள்ளது.
மத்திய பல்கலையின் அதிரடி
இந்நிலையில், புதுச்சேரி கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இறுதி பருவத் தேர்வில் புத்தகங்களைப் பார்த்தே ஆன்லைனிலும், ஆப்லைனிலும் விடையளிக்கலாம் என்று புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
புதுச்சேரி பல்கலை தேர்வு
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவ, மாணவியர்களுக்கு 21ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு தொடங்குகிறது. இந்தத் தேர்வினை கணினி மூலம் ஆன்லைனிலும், தேர்வு மையங்களுக்கு வந்து ஆப்லைனிலும் எழுதும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு
இந்நிலையில், அப்பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் லாசர் அன்மையில் செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டார். அதில், இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு ஆப்லைனிலும், ஆன்லைனிலும் நடத்தப்படும். மாணவ, மாணவியர் தாங்கள் விரும்பும் முறையில் இத்தேர்வுகளை எழுதலாம் என தெரிவித்துள்ளார்.
புத்தகத்தை பயன்படுத்த அனுமதி
குறிப்பாக, திடீரென அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வினால் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி நிலவி வந்த நிலையில் தற்போது புத்தகத்தையும், குறிப்பேடுகளையும் வைத்து தேர்வு எழுதலாம் என அவர் அறிவித்துள்ளார்.
தேர்வு அரையிலும் புத்தகம் அனுமதி
மேலும், தேர்வு அறையில் தேர்வு எழுத வரும் மாணவர்களும் கூட புத்தகங்கள், குறிப்புகள் மற்றும் பிற ஆய்வு பொருட்கள் எடு்த்து வரலாம். ஆனால், கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் குறிப்பு பொருட்களைப் பரிமாறாமல் இருப்பதைக் கண்காணிப்பாளர்கள் உறுதி செய்வார்கள்.
மாணவர்கள் கவனத்திற்கு!
தேர்வு நடைபெறும் நேரம் உள்ளிட்டவை பழைய முறைப்படியே தொடரும். மாணவர்கள் ஆன்லைன் முறையில் தேர்வில் பங்கேற்கும் போது ஏ4 வெள்ளைத்தாளில் கருப்பு மை கொண்டு பதில் எழுத வேண்டும். பிறகு அத்தாள்களை ஸ்கேன் செய்து தேர்வு முடிந்து 30 நிமிடங்களுக்குள் அனைத்து பக்கங்களையும் பிடிஎப் (PDF) பதிவாக மாற்றி அனுப்பவேண்டும்.
கல்லூரி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை
இதனிடையே, மாணவர்கள் ஆன்லைன் அல்லது ஆப்லைன் என தாங்கள் விருப்பப்படும் முறையில் தேர்வில் பங்கேற்கலாம் எனவும், இதில் ஏதேனும் ஒன்றில் மட்டும் தான் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் எனவும் கல்லூரி நிர்வாகம் விதிமுறைகள் வகுக்கக் கூடாது என இணைப்புக் கல்லூரிகளுக்குப் புதுச்சேரி மத்திய பல்கலைக் கழக துணைவேந்தர் குர்மீந்த் சிங் உத்தரவிட்டுள்ளார்.