சென்னை, மார்ச் 19: பிளஸ் 2 கணக்கு தேர்வில் இடம் பெற்ற கேள்விகளில் சில கடினமாக கேட்கப்பட்டதால் இந்த ஆண்டு கணக்கு பாடத்தில் செண்டம் வாங்குவோர் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 5ம் தேதி முதல் நடக்கிறது. நேற்று கணக்கு பாடத்துக்கான தேர்வு நடந்தது. அதில் இடம் பெற்ற கேள்வித்தாள் எளிதாக இருந்ததாக கணக்கு ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் மாணவர்களுக்கு அந்த கேள்வித்தாள் விடை எழுதுவதில் கடினத்தை ஏற்படுத்தியாக கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு நடந்த பிளஸ் 2 தேர்வில் 3 லட்சம் மாணவர்கள் கணக்கு தேர்வு எழுதியதில் 3880 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றனர். ஆனால் இந்த ஆண்டு அந்த அளவுக்கு மாணவர்கள் செண்டம் எடுப்பார்களா என்ற கேள்வி எழுந்தள்ளது.
நேற்றைய பிளஸ் 2 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒரு மதிப்பெண் கேள்வியில் 4வது கேள்வி குழப்பமாக கேட்கப்பட்டது. அதற்கு விடை எழுத மாணவர்கள் திணறினர். 10 மதிப்பெண் கேள்வியை பொருத்தவரை 58 வது கேள்வி பாடப்புத்தகத்திற்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டதால் அதற்கும் பதில் எழுத முடியாமல் மாணவர்கள் திணறினர்.
மேலும் கட்டாய கேள்வியான 70வது கேள்வியில் வெக்டார் பற்றி கேட்கப்பட்டு இருந்தது. பொதுவாக வெக்டார் பிரிவில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவதில்லை. கடந்த ஆண்டுகளில் இந்த பிரிவில் இருந்து கேள்விகளே இடம் பெறாத நிலையில் மாணவர்கள் வெக்டார் குறித்து படிக்கவில்லை. இது கேட்க மாட்டார்கள் என்று பாட ஆசிரியர்களே நம்பிக்கை தெரிவித்ததால் அதை மாணவர்கள் விட்டுவிட்டனர்.
ஆனால் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெக்டாரில் 10 மதிப்பெண் கேள்வி கேட்டது எதிர்பாராதது என்று மாணவர்கள் தெரிவித்தனர். குறைந்த பட்சம் 25 மதிப்பெண்களுக்கு மாணவர்களால் எழுத முடியாத வகையில் கேள்வித்தாள் இருந்தது. நன்றாக படிக்கும் மாணவர்களுக்கே மேற்கண்ட கேள்விகள் சவாலாக இருந்துள்ளது. கிராமப்பகுதியை சேர்ந்த சுமார் ரகமான மாணவர்கள் செண்டம் எடுக்க முடியாது. அதனால் இந்த ஆண்டு கணக்குத் தேர்வில் செண்டம் எடுப்போர் எண்ணிக்கை குறையும்.