எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகள் கடந்த புதன்கிழமையன்று வெளியானதை அடுத்து அந்த படிப்புகளில் சேருவதற்கு நாளை முதல் (ஜூன் 7) ஆன்லைனில் பதிவு செய்யலாம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்குத் தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதிய நிலையில், அவர்களில் 7.97 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், தமிழகத்தில் மட்டும் மொத்தம் 1.23 லட்சம் பேர் தேர்வெழுதியதில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த இரு ஆண்டுகளாக 40 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்த மாநிலத்தின் தேர்ச்சி விகிதம் நடப்பாண்டில் 48.70 சதவிகிதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர நாளை முதல் (ஜூன் 7) ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் பதிவு செய்யலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 3150 எம்பிபிஎஸ், பிடிஎஸ், படிப்புகளில் சேர நாளை முதல் www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளத்தில் ஆன்லைன் வழியில் மாணவர்கள் பதிவு செய்யலாம்.
ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனுடன் உரிய சான்றிதழை இணைத்து, மருத்துவ கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












